இருக்கிறானா? இல்லையா ?
கவியரங்கம் தொடங்குமுன் –
ஒரு
கண்ணீர் அஞ்சலி...
ஒரு
புலிப் போத்தை ஈன்று
புறந்தந்து –
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு ; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது
வாய்க்கு ?
*****
மாமனிதனின்
மாதாவே! – நீ
மணமுடித்தது வேலுபிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை !
நாலில் ஒன்று – உன்
சூலில் நின்று – அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது ; உன் –
பன்னீர்க் குடம்
உடைத்து வந்த பிள்ளை –
ஈழத் தமிழரின்
கண்ணீர்க்குடம்
உடைத்துக் காட்டுவேன்
என்று...
சூளுரைத்து – சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது ;
நீல இரவில் – அது
நிலாச் சோறு தின்னாமல் –
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் –
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது ;
*****
அம்மா !
அதற்கு நீயும் –
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய் ;
நாட்பட –
நாட்பட – உன்
கடைக்குட்டி புலியானது ;
காடையர்க்கு கிலியானது !
*****
“தம்பி
தம்பி ! “ – என
நானிலம் விளிக்க நின்றான் –
அந்த
நம்பி ;
யாழ்
வாழ் –
இனம்
இருந்தது – அந்த
நம்பியை நம்பி ;
*****
அம்மா !
அத்தகு –
நம்பி குடியிருந்த கோயிலல்லவா –
உன்
கும்பி !
*****
சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை...
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி ;
செம்பொன்னாய் இருந்தோரை
செப்பாக்கி ; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி ;
மான உணர்வுகளை
மப்பாக்கி ;
தரும நெறிகளைத்
தப்பாக்கி –
வைத்த காடையரை
வீழ்த்த
தாயே உன்
தனயன் தானே –
தந்தான் துப்பாக்கி!
*****
‘இருக்கிறானா ?
இல்லையா ?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர் ;
ஒன்று –
பரம்பொருள் ஆன பராபரன்
இன்னொன்று
ஈழத்தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன் !
*****
அம்மா ! , இந்த
அவல நிலையில் – நீ...
சேயைப் பிரிந்த
தாயானாய் ; அதனால்
பாயைப் பிரியாத
நோயானாய் !
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி –
வந்தாய் சென்னை ; அது –
வரவேற்கவில்லை உன்னை !
வந்த
வழிபார்த்தே
விமானம் திரும்பியது ;
விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது !
*****
இனி
அழுது என்ன ? தொழுது
என்ன ?
கண்ணீர்க் கலப்பைகள் –
எங்கள்
கன்ன வயல்களை உழுது
என்ன ?
பார்வதித்தாயே! – இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே !
நீ –
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி ;
உனக்குத்
தங்க இடம்தராத – எங்கள்
தமிழ்மண் –
நிரந்தரமாய்த்
தேடிக்கொண்டது பழி !
*****
நன்றி : ஜூனியர் விகடன் 06.03.11
No comments:
Post a Comment